திங்கள், 20 ஜூன், 2016

இந்த மண்ணின் கதைகள்

- குந்தவையின் “ஆறாத காயங்கள்” சிறுகதைத் தொகுப்புக் குறித்து...

– சு. குணேஸ்வரன்

“கதை எழுதவேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும் நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்துகின்றன. பேரினவாதம் தலைதூக்கியாடும் எம் நாட்டில் மனத்தைச் சலனப்படுத்தி சஞ்சலப்படுத்தும் நிகழ்வுகள் பல. நான் அனேகமாக அவற்றை வைத்தே கதைகள் எழுத விரும்புகிறேன்.” என்று ஊடறு நேர்காணலில் பதிவுசெய்துள்ளார். குந்தவையின் அதிகமாக கதைகள் சாதாரண மனிதர்களைப் பற்றிய கதைகள். அவர்களின் பாடுகளைக் கூறும் கதைகள். போரின் பின்னர் சிதைந்துபோன மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் கூறும் கதைகள்.

‘யோகம் இருக்கிறது’ என்ற முதற்தொகுப்பு வெளிவந்து 13 வருடங்களுக்குப் பின்னர் இத்தொகுதி வெளிவருகிறது. இவற்றில் சில கதைகள் தவிர, அதிகமானவை இறுதியுத்தத்திற்குப் பின்னர் எழுதப்பட்டவை. யுத்தப் பிரதேசத்திற்கு வெளியே வாழ்ந்தவர் குந்தவை. சகமனிதர்களின் சந்திப்பின் ஊடாகவும் வாசிப்பின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஊடாகவும் இக்கதைகளைப் படைத்திருக்கிறார். காலிழப்பும் பின்பும், இரும்பிடைநீர், நீட்சி, பாதுகை ஆகியவை தனித்தனிக் கதைகளாக இருந்தாலும் அக்கதைகளில் ஒரு மையச்சரடு ஓடிக்கொண்டிருப்பதை வாசகர் அறிவர்.

யுத்தத்தில் தன் கால்களை இழந்துபோனவன் தன் பிளாஸ்ரிக் கால்களைத் தடவிக்கொண்டு கண்முன்னே சுருண்டுபோன உறவுகளைக் கண்களில் தேக்கிக் கொண்டு எதிர்காலம் பற்றிய திசையிழந்து பேதலிக்கும் கதையும்; தன் தந்தையின் உடல் கண்முன்னாலேயே சிதறியதைக் கண்ட பிள்ளையில் மனதில் ஏற்பட்ட மாறாத வடுவும்; காணாமற்போன மகனின் நினைவுகளோடு அவன் காலில் அணிந்திருந்த சிலிப்பரை தன் சேலைத் தலைப்பில் சுற்றிக்கொண்டு உறங்கும் தாய்மையின் அன்பும், நிச்சயம் ஆறாத காயங்களாகவே உள்ளன.

மறுபுறம் இருக்கும் ஏனைய கதைகள் போரால் மட்டுமல்ல, வறுமையாலும் தனிமையாலும் விரக்தியாலும் அதிகாரத்தாலும் உள்ளும் புறமும் அமுங்கிப்போன மனங்களைக்காட்டும் கதைகள். ‘ஊழியமும் ஊதியமும்’ மிக நேர்த்தியான எழுதப்பட்ட மாதிரிச் சிறுகதையாகவே இளைய சமூகத்திற்கு அறிமுகப்படுத்தக்கூடியது. குடும்பத்தில் ஒரு பெண் எதிர்கொள்ளும் உடல் - உள வாதை இக்கதையிலும் ‘நீட்சி’யிலும் வருகிறது. மேலும் மாடுகளைவிரட்டும் மனிதனை, மனிதர்களை விரட்டும் அதிகாரத்தின் குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட கதையும் குறிப்பித்தக்கது. நொந்துபோன சமூகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி வளத்தைச் சூறையாடிச் செல்லும் மனிதர்களின் கதையாக ‘இரும்பிடைநீர்’ அமைகிறது. ஒட்டுமொத்தமாக எல்லாக்கதைகளும் இழப்பும் வேதனையும் ரணமும் நிறைந்தவை. கண்முன்னே கடந்து செல்லும் காலங்கள் பற்றியவை.

குந்தவையின் கதைகளில் காணப்படும் தனித்துவமான பண்புகளில் முதன்மையானது சம்பவ விபரிப்பும் கதை சொல்லும் நேர்த்தியும். இது குந்தவைக்கே உரிய தனிப்பாணி. ஈழத்து இலக்கியப் பரப்பில் மிகக்கூடிய கவனத்தைப் பெற்ற பெயர்வு, வல்லைவெளி முதலான கதைகளிலும் இந்த அம்சம் அழகாக அமைந்திருந்தது.

குந்தவையில் கதைகளில் கிராமியம் சார்ந்த பண்பாட்டு அம்சங்களையும் கண்டுகொள்ளமுடியும். கோழிக்கறி, புழுக்கம் ஆகியவை இதற்கு ஆதாரங்களாக உள்ளன. இக்கதைகளில் வருகின்ற பாத்திரங்கள் அவர் பழகுகின்ற சகமனிதர்கள்தான். இக்கதைகளில் வருகின்ற பிரதேசப் பின்னணியும் அவர் வாழ்கின்ற பிரதேசம்தான்.

யோகம் இருக்கிறது தொகுப்புக்கும் இத்தொகுப்புக்கும் இடையிலான நுண்மையான அனுபவ வெளிப்பாட்டை தேர்ந்த வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும். இக்கதைகள் அதிகமும் அவரின் முன்னைய அனுபவங்களோடு அவரின் வாசிப்பு அனுபவங்களும் மிக அரிதாகக் கிடைத்த புற அனுபவங்களையும் கொண்டு எழுதப்பட்டவை. ஆனால் அக்கதைகளில் இருக்கும் நேர்மையும் புலக்காட்சி வர்ணனையும் முக்கியமானவை. பாதுகை, நீட்சி, ஊழியமும் ஊதியமும் முதலான கதைகள் மனதை நெகிழ வைப்பவை.

தன்னுடைய முதுமைப் பருவத்திலும் தொடர்ச்சியாக எழுதி வரும் குந்தவையின் கதைகள் இந்த மண்ணின் கதைகள். இந்த மண்ணில் வாழ்ந்த – வாழ்ந்து வரும் மனிதர்களைப் பற்றிய கதைகள். உயிரோட்டமும் சம்பவ விபரிப்பும் எளிமையான மொழியும் கொண்டவை. இக்கதைகள் சகமனிதர்கள்மீது நாம் கொள்ளவேண்டிய பரிவை, ஆதரவை, மற்றவரின் துன்பத்தை உணர்ந்து கொள்ளவேண்டிய மனநிலையை வேண்டி நிற்பவை.
மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் குந்தவையின் எழுத்துக்கள் வாசிக்கப்படவேண்டும். அவை நாம் கடந்து வந்த காலங்கள் பற்றிய பதிவுகளாக அமைபவை. ஈழத்து இலக்கியத்திற்கு வளமூட்டக்கூடியவை.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

வரலாற்றின் சுவடுகளில் இருந்து - தொண்டைமானாறு




- சு. குணேஸ்வரன்

   தொண்டைமானாறு என்றதும் எமக்கு உடன் நினைவுக்கு வருவது செல்வச்சந்நிதி முருகன் ஆலயமும் ஆலயத்தின் அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஆறும்தான். இப்பிரதேசத்தின் வரலாற்றையும் அதன் தொன்மைச் சிறப்புக்களையும் நினைவுபடுத்தும் எச்சங்களில் போரின் பாதிப்புக்களால் அழிந்தவைபோக மீதமானவை இன்றும் தம் மேன்மையை, தொன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

   வரலாறுகள் என்பவை எங்கள் தலைமுறைகள் வாழ்ந்த வாழ்க்கையை, அவர்கள் தாண்டிய தடைகளை எமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பவை. அதனைத்தாண்டியும் மேலும் நாம் கடந்துசெல்லவேண்டிய பாதையைக் காட்டுபவை. அந்த வரலாற்று எச்சங்கள் இருந்த அடையாளம் தெரியாமல் அழிக்கப்படும்போது அல்லது மறைக்கப்படும்போது எங்கள் மூதாதையர் கடந்துவந்த பாதைகளும் எமது நினைவிலிருந்து அழிக்கப்படுகின்றன. அவை அழிக்கப்பட்டால் மீளவும் பூச்சியத்தில் இருந்தே தொடங்கவேண்டும் என்ற நினைவை ஊட்டுவனவாகவோ அல்லது எமது வாழ்வுக்கு அந்நியமான புதிய அடையாளத்தைத் திணிப்பவையாகவோ அமைய வாய்ப்புண்டு. அந்த நிலை இன்றைய உலகமயமாக்கலில் மிக வேகமாக வேரூன்றியும் வருகின்றது.

    மேற்குலக நாடுகள் இன்றுங்கூட தமது தொன்மையை, தமது வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாத்து வருகின்றன. சில இனத்தவர் தங்கள் வேர்களைத் தேடிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

   இந்த வகையில் வடமராட்சிப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் தொண்டைமானாற்றில் சில எச்சங்களை மீட்டுப்பார்க்க முயலலாம். செல்வச்சந்திதி ஆலயம், அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, நன்னீர் நீரணை, பழையபாலம், முகத்துவாரம், உப்புமால், அக்கரை, கோணேசர் ஆலயம், அதன் அருகில் அமைந்திருக்கும் குளம், வீரமாகாளி – மாகாளி அம்மன் கோவில்கள், அதன் அருகே இருக்கும் பிரமர் குளம், வற்றாத கிணறுகள், கெருடாவிலில் அமைந்திருக்கும் மண்டபம் (குகை), சின்னமண்டபம், கோட்டைகாடு ஆகியவற்றை நாங்கள் நினைத்துப்பார்ப்பதற்கு இப்பிரதேசம் இடந்தருகிறது.

வல்லியாறு
   
செல்வச்சந்நிதி ஆலயத்தின் அருகே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் பூர்வீகப் பெயர் வல்லியாறு. அந்த ஆறு இப்போது இருப்பதுபோல் ஆரம்பத்தில் பெருங்கடலுடன் இணைந்திருக்கவில்லை. செல்வச்சந்நிதி ஆலயத்தின் புராணக்கதைகளின் ஊடாக ஆலயத்தின் அருகே வல்லியாறு என்ற பெயருடைய நன்னீரோடை இருந்ததென்றும் அருகே விருட்சங்கள் நிறைந்திருந்தன என்றும் வீரவாகுதேவர், ஐராவசு முனிவர் முதலியோர் இருந்து பூஜையும் தவமும் செய்ததாகவும் செல்வச்சந்நிதி ஆலய செவிவழிக்கதைகளில் சொல்லப்படுகிறது. இது சோழ இராட்சிய காலத்திலேயே ஆழமாக்கப்பட்டு கடலுடன் கலந்து தொண்டைமானாறாக மாறியது. வல்லிநதி ஓடியதால் அதன் தெற்குப்புறம் வல்லிவெளி என்று அழைக்கப்பட்டிருக்கலாம். அதுவே பின்னர் மருவி வல்லைவெளி ஆகியிருக்கலாம் எனக் கருதவும் இடமுண்டு.

தொண்டைமானாறு
     தொண்டைமானாறு என்ற இப்பிரதேசம் ஆரம்பத்தில் ‘மணலூர்’ என்ற பெயர் கொண்டே அழைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களில் குறிப்பாக சோழராட்சிக் காலத்தில் இருந்தே தொண்டைமானாறு என்ற பெயர் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.

தொண்டைமான் என்பவனால் வெட்டப்பட்ட ஆறு என்ற அர்த்தம் பொதுவாக இன்றும் இப்பிரதேச மக்களிடையே வழங்கப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் சங்ககாலம் முதல் பல தொண்டைமான் வம்சத்தினர் வாழ்ந்துள்ளனர். இங்கு குறிப்பிடப்படும் தொண்டைமான் சோழர்காலத்தில் ஆட்சிசெய்த முதலாம் குலோத்துங்க மன்னனின் (கி.பி 1070 - 1120) பிரதம படைத்தளபதியாக இருந்த கருணாகரத் தொண்டைமான் என்பது அரசியல் வரலாற்றின் ஊடாகத் தெளிவாகின்றது.

   ஏனெனில் சோழர்கால மன்னர்களின் ஆட்சியில் ஈழப்பிரதேசம் இருந்திருக்கிறது என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. குலோத்துங்க சோழனின் கலிங்கப்போர் வெற்றியை சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் பாடியுள்ளார். அப்போரை முன்னின்று நடாத்திய கருணாகரத்தொண்டைமானே இக்காலத்திற்குரியவன்.

   கலிங்கப்போருக்கு முன்னர் இலங்கையில் வடபிரதேசத்தைத் தமது ஆட்சிக்குட்படுத்திய சோழரின் காலத்திலேயே கருணாகரத்தொண்டைமான் இந்த ஆற்றையும் ஆழமாக்கினான். இங்கு வந்து கரணவாய், வெள்ளப்பரவை முதலான இடங்களில் தானாகவிளைந்த உப்பைச் சேகரித்து மரக்கலங்கள் மூலம் கொண்டு வந்து சேர்ப்பதற்கும், கடல்கொந்தளிப்பான காலங்களில் மரக்கலங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் கப்பல்களிலிருந்து பொருட்களை மரக்கலங்கள் மூலம் இலகுவாகத் தரைப்பகுதிக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் ஆற்றை ஆழமாக்கி வெட்டியுள்ளான். அதுகாலம்முதல் இப்பிரதேசம் தொண்டைமானாறு என்று அழைக்கப்படலாயிற்று.

மரப்பாலம்
   
பனைமரங்களை நாட்டி அதன்மேல் பாலைமரத் தீராந்திகள்கொண்டு கட்டப்பட்ட பழைய மரப்பாலம் அமைந்திருந்த இடம் இன்றும் அதன் எச்சமாக உள்ளது. இது 1829 ற்கும் 1867 ற்கும் இடையில் அப்போது அரச அதிபராக இருந்த ‘டைக்துரை’யால் கட்டப்பட்டது. அப்பாலத்தில் ஒரு ‘ஆயம்’ அமைக்கப்பட்டு ‘ஆயக்கட்டணம்’ வசூலிக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. பின்னர் 1954 இல் புதுப்பாலம் கட்டப்பட்டது. அது பின்னர் போர்ச்சூழலில் உடைக்கப்பட்டதன் பின்னர் தற்காலிக இரும்புப்பாலம் அமைக்கப்பட்டது. இன்று கட்டப்பட்டிருக்கும் பாலம் தொண்டைமானாற்று வரலாற்றில் 4 வது பாலமாகும். எனவே பழைய மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அதன் கட்டட எச்சம் இன்றும் அந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

உப்புமால்
   தமிழ்நாட்டுக்கு அனுப்புவதற்காக உப்பும் உணவுப் பண்டங்களும் சேகரித்து வைக்கப்பட்ட இடம்தான் ‘உப்புமால்’ என அழைக்கப்படுகிறது. இது ஆற்றுக்கு மேற்குப்புறத்தில் அமைந்திருந்தது. இவ்விடத்தில் நாவல் மரங்களும் சவுக்குமரங்களும் நிறைந்திருந்ததாக அறியப்படுகிறது. இன்று ‘அக்கரை’ யில் சவுக்குமரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. ‘உப்பு’ தமிழ்நாட்டு ஆட்சியாளர்களால் மட்டுமன்றி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்திலும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் மேற்குறிப்பிட்ட கரணவாய் முதலாக விளைந்திருந்த உப்பைச் சேகரித்து வண்டில்கள் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். செட்டியவூர் ஊடாக வரும் வீதி உப்புறோட் என அழைக்கப்படுவதும் இதன் காரணமாகத்தான்.

முகத்துவாரம்
   ஆனையிறவு கடனீரேயிலிருந்து வடக்கே ஓடிவரும் நீர் தொண்டைமானாற்றுக் கடலிலேயே இறுதியில் கலக்கிறது. இவ்வாறு ஆறும் பெருங்கடலும் சந்திக்கும் இடமே முகத்துவாரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விடத்தின் கிழக்கும் மேற்கும் பல வரலாற்றுச் சம்பவங்களுக்குக் களமாக இருந்திருக்கின்றன.

    இன்னொரு வகையில் முகத்துவாரம் என்ற இடம் பறங்கியருடன் போரிட்ட சின்னமகாப்பிள்ளை வந்திறங்கிய இடம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

   மற்றும் முகத்துவாரத்துக்குக் கிழக்கு குடியிருப்புப்பிரதேசமாகும். ‘நடுத்தெரு’ மற்றும் செல்வச்சந்திக்;குச் செல்லும் தெற்குவீதியின் பகுதிகள் ஆகியன பண்டைக்காலத்தில் அரசபரம்பரையினர், படைத்தளபதிகள் இருந்த இடங்களாகும். சில காணிகளின் பெயர்கள்கூட இன்றும் அதிசயிக்கத்தக்கவகையில் உள்ளன. உதாரணமாக இராக்காவளவு, பணிக்கவளவு, சேதுபதியார்கண்டு, அத்திப்படை ஆண்டவன் கொல்லை, நயினார் கொல்லை ஆகிய பெயர்கள் இவற்றை நினைவுபடுத்துகின்றன.

கப்பல் கட்டுதல் மற்றும் கப்பற் போக்குவரத்து
   இவைதவிர சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்புபட்டவை சிலவும் அறியக்கிடைக்கின்றன. ‘திரைகடலோடிய வள்ளல்’ என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும் வீரகத்திப்பிள்ளையின் பெயரால் விளங்கும் பாடசாலையின் நிறுவுநர் வீரகத்திப்பிள்ளையின் வரலாற்றின் ஊடாகவும் அக்காலத்து சமூக பொருளாதார நிலையினையும் அறியமுடிகிறது.

வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்ற அன்னபூரணி கப்;பல் இதற்கு நல்ல உதாரணம். அதன் அயற்கிராமமாகிய தொண்டைமானாற்றில் பழைய பாலத்திற்கு அருகிலுள்ள அக்கரையில் வைத்தே ‘தெய்வநாயகி’ என்ற கப்பல் கட்டப்பட்டது. ஏனைய கப்பல்கள் காரைதீவில் கட்டப்பட்டன. சிவசுப்பிரமணியபுரவி உட்பட 6 ற்கும் மேற்பட்ட கப்பல்களை வீரகத்திப்பிள்ளை வைத்திருந்தார்.

   இன்றும் அக்கரை கடலோரத்தில் மிகுந்திருக்கும் கருங்கற்கள் மற்றும் முருகைக்கற்கள் கப்பல்களின் சீரான ஓட்டத்திற்காக கொண்டு வரப்பட்டவை எனவும் அதேபோல் இங்கிருந்து கப்பல்கள் புறப்படும்போது கெருடாவில் காட்டுக்கற்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் குறிப்பு உண்டு. இவற்றை ‘ஞானப்பாரம்’ என அழைப்பர். உப்பு மற்றும் உணவுப்பொருட்கள் உட்பட பல பொருட்களை ஏற்றி இறக்கும் துறைமுகங்களாக கடலோரத்தின் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை ஆகிய கடற்கரையோரத் துறைமுகப் பிரதேசங்கள் அக்காலத்தில் விளங்கியிருக்கின்றன. வீரகத்திப்பிள்ளையின் கப்பல்களில் பயன்படுத்திய பாரிய நங்கூரங்களில் ஒன்று வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்திலும் மற்றையது வல்வை ஆவணக்காப்பத்திலும் பேணப்பட்டுவருகிறது.

கோணேசர் கோவில்
   
தொண்டைமானாறு சந்தியில் அமைந்திருக்கும் கோணேசர் கோயில் மற்றும் ஆதிவைரவர் கோயில் ஆகியவற்றின் தெற்குப்புறம் இருக்கும் குளம், குளத்தின் அருகே பரந்திருக்கும் சமநிலப்பரப்பு என்பன வரலாற்றுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டவை. பறங்கியர் ஆட்சிக்காலத்தில் இவ்விடத்திலிருந்த பழைய கோணேசர் கோவில் இடிக்கப்பட்டு கத்தோலிக்கத் தேவாலயம் கட்டப்பட்டது என்று யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது.

   கோணேசர் கோயிலின் தெற்குப்பகுதி போர்த்துக்கேயரின் பெரிய சத்துருவாக இருந்த தமிழர்படையின் ‘கரையாரன் சிற்றரசன்’ போர்புரிந்த இடமென குறிக்கப்படுகிறது. இதனை 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் தான் வாசித்த ஆய்வுக்கட்டுரையில் நிறுவியுள்ளதாக செ. நாகலிங்கம் எழுதியுள்ளார்.

மண்டபம் / மண்டபக்காடு
   
ஆரியச்சக்கரவர்த்திகளால் நிலவறைகளாகப் பாவிக்கப்பட்ட இடம் மண்டபக்காடு என ஒரு குறிப்பு உண்டு. கெருடாவிலில் அமைந்திருக்கும் மண்டபம் இயற்கையாகவே அமைந்த ஒரு தொல்பொருட்சின்னமாகும். இது இன்றுவரை வரலாற்று ஆய்வாளர்களினால் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பகுதியாகவே இருக்கிறது. யாழ்ப்பாண மன்னர்கால அரசியல் வரலாற்றுடன் இக்குகை தொடர்புபடுத்திப் பேசப்படுகின்ற அதேநேரம் யாழ்ப்பாண நிலவமைப்பு முறையுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டியது. இதேபோன்ற இயற்கை அமைப்புடைய இன்னொரு மண்டபம் கடலோரத்திற்கு அருகிலிருந்த ‘சின்னமலை ஏற்றம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இருந்தது. போர்ச்சூழலால் அது அழிக்கப்பட்டு விட்டது.

ஏனையவை
   தொண்டைமானாற்றின் சமூக அரசியல் பொருளாதார வரலாறுகளை அறிவதற்கு இலக்கியங்களின் ஊடாகவும் ஆட்சியாளர்களின் வரலாறுகள் ஊடாகவும் சிற்சில குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.

பிற்காலத்தில் புனைவுகளிலும் தொண்டைமானாறு பற்றிய வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின் இரண்டாம் பாகத்தில் தொண்டைமானாறு பற்றிய சில குறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன.

   தொண்டைமானாற்றில் அமைந்திருக்கும் வீரமாகாளி அம்மன் கோவில், நல்லூரில் அமைந்திருக்கும் வீரமாகாளி அம்மன் கோவில் என்பன ஒரே வம்சாவழித் தொடர்புள்ளவர்களினால் ஆதரிக்கப்பட்டதென அறியப்படுகிறது. தொண்டைமானாறு வீரமாகாளி அம்மன் ஆலயம் பரராஜசேகரனால் கட்டப்பட்டது. இதேபோல கெருடாவில் அமைந்துள்ள மண்டபம், மற்றும் பெரியகடற்கரைக்கு கிழக்கே கடலோரத்தில் உயரமான பகுதியில் அமைக்கப்பட்ட முக்கோணவடிவமுடைய கட்டட எச்சம் ‘கோட்டைகாடு’ என அழைக்கப்பட்டது. இவை தொண்டைமானாற்றின் முக்கியமான வரலாற்று எச்சங்களாக விளங்குகின்றன.

   இப்பிரதேசத்தில் ஊர்ப்பெயர்களில் இருந்தும் பல செய்திகளை அறியலாம். செட்டியவூர் என்ற ஊர்ப்பெயர் அக்காலத்தில் செட்டியார்கள் வாழ்;ந்ததற்கான அடையாளமாக உள்ளது. ஏனைய ஊர்ப்பெயர்கள் பிரதேசத்தின் அமைவு கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. மயிலியதனை, கெருடாவில், காட்டுப்புலம், நடுத்தெரு, அக்கரை, செம்பாடு என்பன சில உதாரணங்களாகும்.

   எனவே இவ்வாறான பல வரலாற்றுக் குறிப்புக்களைக் கொண்டிருக்கும் தொண்டைமானாறு போர்க்காலத்தில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிய பிரதேசமாகும். இப்பிரதேசத்தின் தொன்மையான வரலாறுகள் பதிவு செய்யப்படவேண்டும். தொல்பொருட் சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டும். வளர்ந்துவரும் சந்ததிகளுக்கு அவை கடத்தப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் தம் வாழ்வையும் வளமாக்கி இப்பிரதேசத்தின் வளங்களையும் காப்பதற்கு முயல்வார்கள்.

நன்றி : உதயன்,புத்தாண்டு சிறப்பு மலர், 15.01.2015
---

வியாழன், 22 ஜனவரி, 2015

நந்தினி சேவியர் படைப்புகள்


நூல் அறிமுகம்

- சு. குணேஸ்வரன்
விடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் மற்றும் நினைவுக் குறிப்புக்கள் உள்ளடங்கலாக மிகக் காத்திரமான ஒரு தொகுப்பைத் தந்திருக்கும் விடியலுக்கு ஒரு பாராட்டு சொல்லியே ஆகவேண்டும்.

1969 முதல் 2004 வரை நந்தினி சேவியர் எழுதிய 16 சிறுகதைகளும் ‘அயற்கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’, ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளாக ஏற்கனவே நூலுருப் பெற்றுள்ளன. அக்கதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ளமை பிரதான அம்சமாகும்.
இதற்கு அடுத்ததாக ‘தமிழ் இனி’ மாநாட்டில் வாசிக்கப்பட்ட “கடந்த நூற்றாண்டில் மார்க்சிய இலக்கியம்” என்ற கட்டுரையுடன் ‘மாலைமுரசு’ பத்திரிகையில் 2012 ஆம் ஆண்டு தொடராக எழுதிய 12 கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக டானியல் அன்ரனி, வ.அ இராசரத்தினம், சசி கிருஷ்ணமூர்த்தி, சி. பற்குணம் உள்ளிட்டோர் பற்றிய கட்டுரைகளும் இப்பகுதியில் உள்ளன.

பத்தி எழுத்துக்கள் என்ற மற்றொரு பிரிவில் குறும்படங்கள், திரைப்படங்கள் பற்றியும், ஏனைய படைப்பாளிகளின் சில தொகுப்புக்கள் பற்றியும், இலக்கியச் சர்ச்சைகள் பற்றியும் எழுதியவை உள்ளன.

இத்தொகுப்பின் மிக முக்கியமான இன்னொரு பகுதியாக நந்தினி சேவியரின் அகத்தையும் புறத்தையும் காட்டும் நேர்காணல்கள் உள்ளன. ‘தலித்’, ‘சுட்டும் விழி’ ஆகிய இதழ்கள் உட்பட இன்பராசா நிகழ்த்திய மற்றொரு நேர்காணலும் இத்தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர கௌரிபாலன், முகைதீன் சாலி, லெனின் மதிவானம், கோபாலபிள்ளை, ஷெல்லிதாசன், இரத்தினவேலோன் ஆகியோரின் நூல்களுக்கு நந்தினி சேவியர் எழுதிய முன்னுரை மற்றும் பின்னுரைக் குறிப்புக்களும் மற்றொரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன.

நந்தினி சேவியரின் எழுத்துக்கள் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் முகமாக அவரின் வெளிவந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களையும் ஆதாரமாக வைத்து அவ்வப்போது இ. முருகையன், முஹசீன், முகைதீன் சாலி, லெனின் மதிவானம், இதயராசன், இரண்டாம் விசுவாமித்திரன், அநாதரட்சகன், முல்லை வீரக்குட்டி, தேவி பரமலிங்கம், மேமன்கவி, செ. யோகராசா, செல்லத்துரை சுதர்சன் ஆகியோர் எழுதிய 12 பதிவுகள் அவரின் எழுத்துக்கள் பற்றி அசைபோடுவதற்கு ஏற்ற மதிப்பீடுகளாக அமைந்துள்ளன.

நூலின் இறுதியில் நந்தினி சேவியர் எழுதியவற்றுள்ள தொலைத்துவிட்ட சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைத்தொடர் ஆகிய தகவல்கள் அடங்கிய பட்டியலை வாசித்தபோது நெஞ்சம் பதைத்தது. 1966 முதல் 1974 வரை எழுதியவற்றுள் தவறிப்போன 14 சிறுகதைகளையும், ஈழநாடு இதழில் 1974 இல் 56 வாரம் தொடராக வெளிவந்த ‘மேகங்கள்’ என்ற நாவலையும் அதே ஆண்டு எம்.டி குணசேன நிறுவனக் காரியாலயத்தில் சிந்தாமணி பத்திரிகைக்கென கொடுத்த ‘கடற்கரையில் தென்னை மரங்கள் நிற்கின்றன’ என்ற நாவலையும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்க 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற “ஒரு வயது போன மனிதரின் வாரிசுகள்” உட்பட ‘தெளிவு பிறக்கிறது’ குறுநாவலையும் (பூம்பொழில் 1971), களஆய்வுக் கட்டுரையினையும் (ஈழமுரசு 1987) இந்த நூற்றாண்டிலேயே தொலைத்துவிட்டு நிற்கிறார் நந்தினிசேவியர். போர்ச்சூழல் காவுகொண்ட மனிதர்களின் கணக்கிலே இந்தப் படைப்புக்களின் கணக்குகளும் உள்ளடங்கி விட்டன. இன்றைய இலத்திரனியற்சூழலில் இவற்றில் சிலவற்றையாவது எங்கோ ஒரு மூலையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற பேரவா எனக்கும் உண்டு.

ஈழத்துப் புனைகதை இலக்கியத்தில் தனித்துவமான ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்கின்ற நந்தினி சேவியரின் அரிதான படைப்புக்களை தமிழ்ச்சூழலில் பரவலாக்கும் பொருட்டு ஆவணப்படுத்தி ஒரு காத்திரமான நூலாகக் கொண்டு வந்த விடியல் பதிப்பகத்திற்கு நன்றி சொல்ல ஈழத்துப் படைப்புலகம் கடமைப்பட்டுள்ளது.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

நவீன தேடல்கள் நிறைந்த யாழ் மண்ணின் பதிவுகள்


பத்தி

- சு. குணேஸ்வரன்

(குறிப்பு - பிரதேசம் சார்ந்த நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பாக 2000 ற்குப் பின்னர் யாழ்மாவட்ட இலக்கியச் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு வினாவை மகுடம் ஆசிரியர் அனுப்பியிருந்தார். அதற்கு எழுதப்பட்ட சுருக்கமான பதிலே இங்கு தரப்படுகிறது.)


2000 ற்குப் பின்னரான காலம் அரசியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டதாக இருக்கிறது. போரும் – சமாதானமும், போரும் - அழிவும் என மாறியகாலம். இக்காலங்களில் எழுந்த கலை இலக்கியங்களும் மக்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீளமுடியாத வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவனவாகவே அமைந்திருந்தன. இவற்றை மிக நுண்மையாகத்தான் நோக்கவேண்டும். ஆனாலும் சில பொதுவான ஓட்டங்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.

கவிதையைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்தேறியிருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு மூடுண்ட காலமாக இருந்தபோது வெளிவந்த படைப்புக்கள் மக்களின் இயல்புவாழ்க்கை அழிக்கப்பட்டதன் வெளிப்பாடுகளைப் புலப்படுத்துவனவாக அமைந்திருந்தன. இக்காலத்தில் ஆயுதம் தரித்த எல்லாத்தரப்பினரிடம் இருந்தும் மக்கள் பல்வேறுவிதமான வாழ்க்கை முரண்பாடுகளை எதிர்கொண்டனர். குறிப்பாக அக்காலத்தில் வெளிவந்த தீபச்செல்வன், சித்தாந்தன், துவாரகன், சத்தியபாலன் ஆகியோரின் கவிதைகளின் ஊடாக இந்த மூடுண்ட காலங்களை அறிந்துகொள்ளமுடியும். அப்போது வெளிவந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகையில் ஹரிகரசர்மா எழுதிய ‘யாழ்ப்பாண நாட்குறிப்புகள்’ என்ற புனைவுசாரா எழுத்துக்களையும் இக்கவிதைகளோடு இணைத்து நோக்கலாம்.

தொடர்ந்து போருக்குப் பின்னரான தொகுப்புக்களில் பா. அகிலன், நிலாந்தன், கருணாகரன், தானா விஷ்ணு, ந. மயூரரூபன், கி.பி நிதுன் ஆகியோரின் கவிதைகள் அதிக கவனத்தைக் கோருவனவாக அமைந்துள்ளன. இவை தவிர இக்காலத்தில் வெளிவந்த வேறு பல தொகுப்புக்களிலும் மக்களின் பல்வேறு நெருக்கடிகள் பதிவாகியுள்ளன. த. அஜந்தகுமார், யாத்திரீகன், செ.சுதர்சன், இ.சு முரளிதரன், ஐ. வரதராசன், கு. றஜீபன், பெரிய ஐங்கரன், கை. சரவணன் என்று பலரின் தொகுப்புக்களைக் கூறலாம். கவிஞர் சோ. பத்மநாதனும் தொடர்ச்சியாக இக்காலத்தில் எழுதிவந்துள்ளார்.

அண்மையில் வெளிவந்த ஓவியர் சனாதனனின் ‘The Incomplete Thombu’ முக்கியமான நூலாக அமைந்துள்ளது. ஓவியமும் புனைவும் வரலாறும் இணைந்த வகையில் தமிழர் வாழ் பிரதேசம் பற்றியும் அவர்களின் வாழ்வனுபவம் பற்றியும் பன்முக வாசிப்புக்குரிய தளத்தை ‘தோம்பு’ கொடுக்கிறது. போர்க்கால வாழ்வின் விளைவுகளைப் புதிய வடிவத்தில் தருகிறது. இது தமிழ்ப் படைப்புச் சூழலுக்குப் புதியது.

சிறுகதைத்துறையில் உருவப்பரிசோதனைகள் மூலம் இராகவன், மருதம் கேதீஸ், சித்தாந்தன் ஆகியோர் தருகின்ற கதைகள் கவனத்திற்குரியன. போருக்குப்பின்னரான சிறுகதைகளில் அதிக கவனத்தைக் கோருவனவாக யோ.கர்ணன், கருணைரவி ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புக்கள் வந்துள்ளன. இராஜேஸ்கண்ணன், சீனா உதயகுமார், தாட்சாயணி, சாரங்கா, விஸ்ணுவர்த்தனி, ஆகியோரின் முயற்சிகள் கவனத்திற்குரியன. இயல்வாணனின் சிறுகதைகளும் சிறுவர் கதைகள் அடங்கிய தொகுப்பு நூலும் இக்காலத்தில் வந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்த ‘இங்கிருந்து’, ‘பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்’, ‘மண்ணின் மலர்கள்’ ஆகியன முக்கியமான தொகுப்புக்கள். இவைதவிர மூத்த படைப்பாளிகளான தெணியான், குப்பிழான் ஐ. சண்முகன், நந்தினி சேவியர், குந்தவை, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சட்டநாதன், கே.ஆர் டேவிட், த. கலாமணி, அநாதரட்சகன், கொற்றை பி .கிருஸ்ணானந்தன், ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகளும் இக்காலகட்ட வாழ்வியலின் பல்வேறு நெருக்கடிகளை வெளிப்படுத்துகின்றன.


கவிதை சிறுகதைகளோடு ஒப்பிடுகின்றபோது நாவல் முயற்சி தேக்க நிலையிலேயே உள்ளது. இக்காலத்தில் செங்கை ஆழியானின் ‘போரே நீ போ’, ‘வானும் கனல் சொரியும்’ ‘மீண்டும் வருவேன்’, ‘ருத்ர தாண்டவம்’, தெணியானின் ‘தவறிப்போனவன் கதை’ கலையார்வனின் ‘உப்புக்காற்று’ ஆகியன வெளிவந்துள்ளன. வேறு முயற்சிகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

ஆய்வு நிலையில் பல்கலைக்கழகத்தைச் சார்ந்துதான் பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வரங்குகள், மற்றும் அரசு சார்ந்து பிரதேச ரீதியாக நடைபெற்ற ஆய்வரங்குகளும், முக்கியமானவை. தூண்டி இலக்கிய வட்டம் 2003 இல் ‘ஈழத்துத் தமிழ்க் கவிதை’ தொடர்பாக நிகழ்த்திய ஆய்வரங்கும் திருமறைக் கலாமன்றம் நிகழ்த்திய ஆய்வரங்கும் குறிப்பிடத்தக்கவை. ஆனால் அதிகமான ஆய்வரங்கக் கட்டுரைகள் தாமதமாகவே நூலுருப்பெறுவதனால் உரிய நேரத்தில் கவனத்தைப் பெறத் தவறிவிடுகின்றன.

விமர்சன வளர்ச்சி ஈழத்திலே தொடர்ந்தும் தேக்க நிலையில்தான் உள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக இத்துறையில் இயங்கி வருகின்ற அ. யேசுராசா, செ. யோகராசா ஆகியோர் முக்கியமானவர்கள். மேலும் கல்வியியல்துறைக்கு ஊடாக வருகின்ற சபா ஜெயராசாவின் பங்களிப்பும் முக்கியமானது. அண்மைக்காலத்தில் பா.அகிலன், க.அருந்தாகரன், ஆகியோர் பனுவல் இதழுக்கு ஊடாகவும் மானிடவியல் துறைசார் வாசிப்புக்களை நிகழ்த்தி வருவதும், இலக்கியம் மற்றும் அரசியற்தளத்தில் நிலாந்தனின் பங்களிப்பும் கவனத்திற்குரியன. யாழ். பல்கலைக்கழகம் சார்ந்து துறை ரீதியாக இயங்குபவர்கள் பலர். இவர்களில் ஈ. குமரன், கந்தையா சிறீகணேசன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

புதிய தலைமுறையினர் பலர் இதழ்களுக்கு ஊடாக (கூடம், மறுபாதி, தவிர ,கலைமுகம், ஞானம், ஜீவநதி) இயங்குகின்றனர். இவை பற்றிய மதிப்பீடுகளுக்கு மேலும் காலமிருக்கிறது என்று எண்ணுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் எல்லாப் படைப்பாளிகளையும் ஒன்றிணைக்கக்கூடிய காத்திரமான இலக்கிய அமைப்பு என்று குறிப்பிடுவது கடினம். அரசியற்கட்சிகள் போலத்தான் இலக்கியக்காரர்களும் பிளவுண்டு இருக்கிறார்கள். முன்னர் இயங்கிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்திடமும் இந்தக் குறைபாடு இருந்தது. தவிர்க்கமுடியாமல் எல்லோரையும் இணைக்கும் நிகழ்வுகளெனில் அவை களியாட்டங்களாகக்தான் இருக்கவேண்டும். மிகப்பெரும் எடுப்பில் நிதியை இறைத்துச் செய்யப்படும் கலை இலக்கிய நிகழ்வுகள்கூட இறுதியில் ஒப்புக்காக நடைபெறுவனவாகத்தான் அமைகின்றன.

இந்த நிலையில் தவிர்க்கமுடியாமல் சிறிய சிறிய குழுக்களாக ஒருமித்த நிலையில் இயங்குகின்ற இலக்கிய அமைப்புக்களால்தான் சிறியளவிலாவது இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லமுடிகிறது. அறிவோர்ஒன்றுகூடல், அவை, உயில்/
, இளங்கோ கழகம், இணுவில் இலக்கிய வட்டம், யாழ் இலக்கிய வட்டம், சமூக விஞ்ஞான படிப்பு வட்டம் ஆகியன தம்மளவில் சில காத்திரமான வேலைகளைச் செய்து வருகின்றன. இவற்றோடு பல்கலைக்கழக மட்டத்திலும் இதழ்கள் சார்ந்தும் பலர் செயற்படுகிறார்கள். சுன்னாகம் பொதுநூலகத்தின் ஊடாக பல காத்திரமான முயற்சிகள் முன்மாதிரியாக முன்னெடுத்துச் செல்லப்படுவதும் கவனத்திற் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது.


திருமறைக்கலாமன்றத்தின் நாடக முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இக்காலத்தில் அவர்கள் ஆற்றுகை செய்த பல நாடகங்கள் உள்ளன. அவற்றுள் ‘அற்றைத்திங்கள்’ முக்கியமானது. மேலும் ஈழத்து இசை நாடக வரலாற்றில் புதிய முயற்சியாக அண்மையில் மேடையேறிய குழந்தை சண்முகலிங்கத்தின் ‘கண்டனள் சீதையை’, செயல்திறன் அரங்க இயக்கத்தினரின் செயற்பாடுகள், மற்றும் தே. தேவானந் முயற்சியில் அண்மையில் வெளியரங்கில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் முக்கியமானவை. இவை தவிர இசை நாடக விழாக்கள், பாடசாலை மட்டங்களில் நிகழ்த்தப்பட்ட காத்திரமான நாடகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு அப்பால் கிராமங்களில் இன்னமும் உயிர்த்துடிப்போடு இருக்கின்ற பாரம்பரிய கூத்து மரபில் இருந்து வந்த கூத்துக்கலைகள் குறிப்பாக வடமராட்சியில் அல்வாய், மாதனை, தும்பளை, குடத்தனை ஆகிய பிரதேசங்களும்; வலிகாமத்தில் வட்டுக்கோட்டையிலும் யாழில் பாசையூரிலும் தொடர்ச்சியாக கூத்துக்கள் ஆடப்பட்டு வருகின்றன. இவை உரியவகையில் ஆவணப்படுத்தவேண்டியவையாக உள்ளன.

இதழியல் முயற்சிகள் முன்னர்போல தொடர்கின்றன. ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப பலன் கிடைக்கின்றனவா என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதழ்களை வெளியிட்டுவிட்டு டொமினிக் ஜீவா கூறுவதுபோல தலையிற் சுமந்து விற்கவேண்டிய நிலையிலேயே இன்றும் ஈழத்து இதழியற்சூழல் உள்ளது. சமூகத்தின் பல மட்டங்களையும் சகல நூலகங்களையும் அவை சென்றடைகின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் பல இதழ்கள் வந்து நின்றுவிட்டன. குறிப்பாக கவிதை, தெரிதல், கூத்தரங்கம், அம்பலம், தூண்டி, புதியதரிசனம், புலரி ஆகிய இதழ்கள் அவற்றுள் முக்கியமானவை. இன்று வெளிவருவனவற்றுள் கலைமுகம், தவிர, மறுபாதி, ஜீவநதி, தாயகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இன்னமும் பல இதழ்கள் வருகின்றன.

கொழும்பிலிருந்து வெளிவருகின்ற ஞானம், மல்லிகை, கலைக்கேசரி ஆகியவற்றில் யாழ்ப்பாணத்துப் படைப்பாளிகளின் பங்களிப்பு கவனத்திற்குரியது. குறிப்பாக கலைக்கேசரியில் வருகின்ற தமிழ்ப்பண்பாடு, வரலாறு தொடர்பான கட்டுரைகள் முக்கியமானவை. பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதி வருகின்ற “யாழ்ப்பாணத்து வாழ்வியல்” தொடர்கட்டுரையும், பேராசிரியர் எஸ். புஷ்பரட்ணம் வரலாறு, தொல்லியல் தொடர்பாக எழுதிவருகின்ற கட்டுரைகளும், பத்திரிகைகளில் கோகுலராகவன், வேதநாயகம் தபேந்திரன் ஆகியோர் யாழ்ப்பாணப் பண்பாட்டினை புனைவுசாரா வகையில் ஆவணப்படுத்தி வருகின்றமையும் இக்காலத்தில் கவனத்திற்கொள்ளத்தக்கனவாக உள்ளன.
ஆனால் ஈழத்து இதழியற் சூழலில் மறுமலர்ச்சி, அலை, மூன்றாவது மனிதன் போன்ற இதழ்கள் ஏற்படுத்திய பாதிப்பினை தற்போது வெளிவருகின்ற இவ்விதழ்கள் ஏற்படுத்தியுள்ளனவா என்பதையும் நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

எனவே 2000 ற்குப் பின்னரான யாழ்ப்பாணத்து இலக்கிய முயற்சிகளில் ஒவ்வொரு இலக்கிய வடிவத்திலும் கவனத்திற்குட்படுத்த வேண்டியவற்றை இங்கு சுட்டிக்காட்டியுள்ளேன். கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்கள் ஏற்கெனவே நடைபெற்ற ஆய்வரங்குகளில் கவனப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவையும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியனவாகும்.

நன்றி :- மகுடம், இதழ் - 5,ஜனவரி – மார்ச் 2013.


மேலதிக இணைப்பு -

இங்கு குறிப்பிட்டவற்றுள் சிறுகதைப்பகுதியில் குந்தவை தொடர்ச்சியாக எழுதிவருகிறார் என்பதனால் அவரது பெயர் சிறுகதை தொடர்பான பகுதியில் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கவிதைகளில் த. ஜெயசீலன், சிறீபிரசாந்தன் ஆகியோரும் கவனத்திற் கொள்ளப்படவேண்டியவர்கள்.

இலக்கிய அமைப்புக்களில் 'யாழ் இலக்கியக் குவியம்' அண்மைக்காலத்தில் புதிய இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வருகிறது.

ஆய்வு மற்றும் விமர்சனம் தொடர்பாக புதிய தலைமுறையினர் மிக ஈடுபாட்டுடன் இயங்கி வருகிறார்கள். இவர்கள் பற்றி விரிவாக மேலே குறிப்பிடவில்லை. குறிப்பாக இதழ்களுக்கு ஊடாக இவர்களின் வருகை கவனத்திற்கொள்ளவேண்டும். கட்டுரையாசியர் உட்பட சி. ரமேஸ், செ. சுதர்சன், சிறீபிரசாந்தன், இ. இராஜேஸ்கண்ணன், சி. விமலன், த. அஜந்தகுமார் ஆகியோர் அண்மைக்காலத்தில் தீவிரமாக ஆர்வத்துடன் செயற்பட்டு வருகிறார்கள்.


திங்கள், 24 ஜூன், 2013

"கெருடாவில் - ஊர்ப்பெயர் வரலாறு" - ஒரு குறிப்பு

கெருடாவில் மாயவர் ஆலயம்

- சு. குணேஸ்வரன்

            ‘கெருட + ஆவில் = கெருடாவில்’ என அமையும். ‘கெருடன்’ ‘கருடன்’ என்பன தமிழ் அகராதிப்படி ஒரே அர்த்தத்தைக் குறிப்பனவாகும்.     மேலும் நோக்கினால் ‘கெருடன்’ என்ற பறவையை விஷ்ணுவுக்குரியதாகக் கொள்வர். ‘ஆ’ என்பது பசு. ‘வில்’ என்பது வில் வளைவிலான குளம், அரைவட்டம், சிறுகுளம், ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது ‘சிறிய குளம்’ எனக் கருதலாம். ‘வில்’ என்ற கருவி எவ்வாறு அரைவட்டமாக வளைத்து எய்யப்படுகிறதோ அதேபோல அரைவட்ட வடிவ சிறிய நீர் நிலைகளைக் குறிப்பிட ‘வில்’ என்ற சொல் பயன்பாட்டில் இருந்துள்ளது. இவை பழந்தமிழ் இலக்கியங்கள்  ஊடாக நாம் அறியும் செய்திகளாகும். 

            கெருடாவில் பிரதேசம் குறிப்பாக ஆரம்பத்தில் ஈறள் காடுகளைக் (நெருக்கமாக இருந்த காடு) கொண்ட பிரதேசமாக அமைந்திருந்ததால் கருடன் என்ற பறவையினம் அதிகம் இருந்திருக்கலாம். (அதிகமான ஊர்ப்பெயர்கள் உயிரினங்களின் பெயர்களுடன் இணைத்து காரணப்பெயராக வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணம் :- கெருடாவில் - (கெருடன்), கொக்குவில் - (கொக்கு), மந்துவில் - (மந்தி), நவிண்டில் (நண்டு) போன்ற ஊர்ப்பெயர்களை ஞாபகப்படுத்தலாம்.) அதேபோல் அங்கிருந்த நீர் நிலையின் காரணத்தால் ‘வில்’ என்பதும்  வந்திருக்கமுடியும் என்று கருதலாம்.

     மாயவர் கோவிலுக்கு அருகில் உள்ள கெருடாவில் அம்மன் கோவிலிலிருந்து கெருடாவில் பாடசாலைக்குச் செல்லும் கிழக்கு வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலுக்கும் இடையில் தெற்குப்புறமாக முன்னர் ஒரு சிறிய குளம் இருந்ததாக மூதாதையர் குறிப்பிடுகின்றனர். அக்குளம் இருந்த இடம் ‘பால்மோட்டை’ என தொட்டில் கந்தசாமி கோவில் ஆலய பாலசுப்பிரமணியக் குருக்கள் குறிப்பிடுகிறார்.

    தற்காலத்தில் மழைபெய்தபின்னர் அதனை அண்டிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருத்தலையும் கண்டுகொள்ளமுடியும். அதுமட்டுமல்லாமல் கோட்டைச்சீமா அம்மன் கோயிலின் கிழக்குப்புறத்தின் ஊடாகவும், கெருடாவில் மாயவர் கோவிலுக்கு தெற்குப்புறமாகவும், வடக்குத் தெற்கு பாடசாலை வீதிவழியாக வரும் நீரும் மழைக்காலத்தில் இவ்விடத்தில் தேங்குவதனை அவதானிக்கலாம். குளம் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் இப்பொழுதும் கொண்டல் மரங்கள் காணப்படுகின்றன. 

            இப்பகுதிக்கு அருகில் பிராமண வகுப்பினர் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்விடத்திற்குரிய காணிகளின் பெயர்களை அல்லது தோம்புகளைத் தேடுவதன் ஊடாகவும் இவ்விடத்தில் இருந்த குளமும் அது தொடர்பான காரணப்பெயரும் மேலும் உறுதி செய்வதற்கு வாய்ப்பிருக்கும்.

            இந்தப் பிரதேச நிலவமைப்பை அடிப்படையாகக் கொண்டு மேலும் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டலாம். மயிலியதனை, என்பது ‘மயிலம்’ என்னும் மரத்தின் பெயரால் உருவானது. கேணித்தோட்டம் என்று இன்று வழங்கப்படும் பெயர் ‘நீர்நிலை’ மற்றும் ‘சிறு குளம்’ என அர்த்தப்படும்.  மற்றும் வயல் சார்ந்த மருதநிலத்தின் ஊர்ப்பெயர்களாக ‘வில்’, ‘பள்ளி’  ஆகியனவும் வழங்கப்படுகின்றன. அதனால்தான் பள்ளிவாசல் என்பது - பள்ளவாசல் என அழைக்கப்பட்டிருக்கலாம். (நீர் தேங்கக்கூடிய பள்ளமான நிலப்பிரதேசத்தைக் கொண்டதனாலும் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்), இதன் அடிப்படையிலேயே ‘வில்’ என்பதும் கெருடாவிலைப் பொறுத்தவரையில் சிறிய குளத்தைக் குறிப்பிடவே வழங்கங்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

(கெருடாவில் மாயவர் ஆலயத்தின் தோற்றத்திற்கு வித்திட்டவரும் ஆலய குருவாக விளங்கியவருமாகிய திரு க. செல்லன் (மாயவர் ஐயா) அவர்களின் மறைவின் 31 ஆம் நினைவு மலருக்கு எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து ஒரு பகுதி)

செவ்வாய், 26 மார்ச், 2013

இலக்கியத் திருடர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது?


- சு. குணேஸ்வரன்

திருட்டுக்கள் பலவிதம். அதில் பேசப்படாத திருட்டு 'அறிவுத்திருட்டு'. அதில் ஒரு பகுதி 'இலக்கியத்திருட்டு'. ஒருவர் மிகக்கடினப்பட்டு தனது நேரம்,பொருள், உழைப்பு எல்லாவற்றையும் செலவளித்துத்தான் ஏதோ எழுதுகிறார். அது தகுதியோ இல்லையோஅவரவரின் சொந்தப் படைப்பாக அல்லது முயற்சியாக அமையும்போது அதற்கு மதிப்புக் கொடுத்தான் ஆகவேண்டும். இதுதான் நீதியும்கூட. 

எழுதுபவை எல்லாம் சமூகம் பயன்படுத்திக் கொள்ளத்தான். அதைத்தான் எங்கள் முன்னோர் செய்திருக்கிறார்கள். இன்னும் மற்றவர்களும் செய்கிறார்கள். ஆனால் முன்னரே எழுதியவற்றை முறையாக எடுத்தாளுபவர்களைப் பற்றி யாரும் குறைசொல்லப்போவதில்லை. 

ஒருவர் எழுதிய கட்டுரையின் தொடரை அல்லது பகுதியை உரிய மேற்கோளுடன் பயன்படுத்தவேண்டும்.  இதுதான் இலக்கிய தர்மமும்கூட. (முழுமையாகவே களவெடுத்து பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்) ஆனால் எங்கள் திருட்டு ஜாம்பவான்கள் மிக இலகுவாக குழந்தையின் கையில் இருந்து காகம் வடையைத் தட்டிப் பறிப்பதுபோல தட்டிப்பறித்துச் செல்கிறார்கள்.

சரி எழுதினவர் பெயரைப் போடத் துணிச்சல் இல்லாவிட்டாலும்  எங்கே இருந்து இந்தப் பகுதியை எடுத்தாய் என்றாவது போடலாம் அல்லவா? 

அவரவர் தண்டனை கொடுப்பதற்கு - கசையடி கொடுக்கிறார்கள், சிறையில் தள்ளுகிறார்கள், தண்டப்பணம் வாங்குகிறார்கள்,  தலையை வெட்டுகிறார்கள், கொடும்பாவி எரிக்கிறார்கள்,  கோஷம் போடுகிறார்கள்.

இலக்கியத் திருடர்களுக்கு நாங்கள் என்னதான் தண்டனை கொடுப்பதாம்? 

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள்




சு. குணேஸ்வரன் (துவாரகன்)

ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகிய சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி நந்தினிசேவியர் ஐயா மூலம் இன்று (20-04-2012) பகல் அறியநேர்ந்தது.

சண்முகம் சிவலிங்கம் என்றாலே ‘ஆக்காண்டிப் பாடல்’தான் ஞாபகம் வரும். ‘ஆக்காண்டி’ என்ற நாட்டார் பாடலில்; தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழைந்து வருவதை எல்லோரும் அறிவர். அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது.

1988 இல் வெளிவந்த “நீர்வளையங்கள்” என்ற தொகுப்பினூடாக இலக்கிய உலகில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பிறகு 2010 இல் தான் அவருடை ய இரண்டாவது தொகுதியான “சிதைந்துபோன தேசமும் தூர்ந்து போன மனக்குகையும்“ வெளிவந்தது. இந்த இரண்டாவது தொகுப்பு ஒரு காவியம்போலவே தொகுக்கப்பட்டுள்ளதை படிப்பவர் உணர்வர்.

அண்மைக்காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. விமர்சனத்தின் புதிய போக்குகளை அவை இனங்காட்டத்தக்கவை. கவிதைகளோடு சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிவற்றிலும் தன் ஆளுமையைச் செலுத்திவந்துள்ளார். ஆனால் கவிதையே அவரை ஒரு அழியாக் கவிஞனாக நிலைநிறுத்தியுள்ளளது.


கவிஞர் சண்முகம் சிவலிங்கம் பற்றி மூன்று ஞாபகங்கள் என்னிடம் உள்ளன.

அன்னாரை ஒரே ஒருமுறைதான் நேரில் காணக்கிடைத்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த தி. செல்வமனோகரனின் ‘தூண்டி’ என்ற இலக்கிய இதழ் 2003 இல் யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் 3 நாள் ஆய்வரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கவிதை தொடர்பான அரங்கில் சண்முகம் சிவலிங்கம் உரையாற்ற வந்திருந்தார்.  வ.ஐ.ச ஜெயபாலன், ஒட்டமாவடி அறபாத், மு. பொ ஆகியோரின் கவிதைகள் பற்றியே அவரின் உரை அமைந்தது. அன்றையதினம் அவரை நேரில் கண்டிருக்கிறேன். ஆனால் உரை கேட்கக் கிடைக்கவில்லை.

மற்றும் ஒரு சந்தர்ப்பம் நான் அப்போது யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது  “நாட்டார் இசைமாலை” என்ற நிகழ்வினை யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தினூடாக பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோரின் வழிகாட்டலில் நண்பர்களுடன் பயின்று (1999) அதனை பல இடங்களில் நிகழ்த்தினோம். முக்கியமாக ஆக்காண்டிப்பாடல், பண்டிப்பள்ளுப்பாடல், முசுறுப்பாடல், தாலாட்டு முதல் வேடிக்கைப்பாடல் வரையான பலவகையான நாட்டார்பாடல்கள் அங்கு நிகழ்த்தப்பட்டன. ஆனால் ஆக்காண்டிப்பாடலை தனிக்குரலில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கும் நண்பி சுகன்யா தனியாக முதலில் பாட; நாங்கள் கோரஷாக பாடுவோம். அப்போது அந்தப் பாடலில் இழைந்து வரும் சோகம் வார்த்தைகளால் சொல்லமுடியாது. அந்த நேரங்களில் எல்லாம் சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஆக்காண்டிப்பாடல் பற்றியும் அறிந்திருந்தோம். அதன்பிறகு நான் பணியாற்றிய பாடசாலைக் கலை நிகழ்வுகளில் அந்தப்பாடலை மாணவர்களுக்கு பழக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தவறாமல் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்தின் பெயரும் எப்படியோ வந்துவிடும்.

இன்னொரு சந்தர்ப்பம் 2008 இல் எனது “மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள் “ தொகுப்பு வெளிவரமுன்னர் அ.யேசுராசா அவர்களிடம் கவிதைகளில் இருக்கும் முரண்கள், தவறுகள், திருத்தங்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது "முதுகுமுறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்" என்ற எனது கவிதையை சிலாகித்து சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை ஒன்றுடன் தொடர்புபடுத்தி உரையாடினார். அது எனக்கும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்திருந்தது. பல்கலைக்கழகத்தில் கற்கைநெறிக்காக நாங்கள் கவிதைகளை அறிந்து கொண்ட சந்தர்ப்பங்கள்; மேலும் ஈடுபாட்டோடு பல கவிஞர்களைத் தேடிப்படிக்க வைத்தன. அப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டியவராக சண்முகம் சிவலிங்கம் எங்கள் முன் இருந்தார்.

இந்த மூன்று ஞாபகங்களும் தவிர்க்கமுடியாமல் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் மறைவின்போது முன்னால் வந்துவிடுகின்றன.
ஈழத்துக் கவிதை வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக என்றும் நிலைத்திருக்கும் பெருமைக்குரியவர் கவிஞர் சண்முகம் சிவலிங்கம்.
அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகள்

நான் மேலே குறிப்பிட்ட இரண்டு கவிதைகளையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1.
இன்று இல்லெங்கிலும் நாளை

-சண்முகம் சிவலிங்கம்

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக.
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்
தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.
---



2.
ஆக்காண்டி ஆக்காண்டி

-சண்முகம் சிவலிங்கம்

”ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.


கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டிகள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.

கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.

நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.

சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.

வீதி சமைத்தேன்.

விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.

ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.

கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மி யழவில்லை.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்ந்ததும்
குடல் சுருங்கி நின்றார்கள்.

பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.

வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்.
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.

"கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்.
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆன வரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்.
போனவரைக் காண்கிலனே.

ஆக்காண்டி, ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
---