செவ்வாய், 26 மார்ச், 2013

இலக்கியத் திருடர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது?


- சு. குணேஸ்வரன்

திருட்டுக்கள் பலவிதம். அதில் பேசப்படாத திருட்டு 'அறிவுத்திருட்டு'. அதில் ஒரு பகுதி 'இலக்கியத்திருட்டு'. ஒருவர் மிகக்கடினப்பட்டு தனது நேரம்,பொருள், உழைப்பு எல்லாவற்றையும் செலவளித்துத்தான் ஏதோ எழுதுகிறார். அது தகுதியோ இல்லையோஅவரவரின் சொந்தப் படைப்பாக அல்லது முயற்சியாக அமையும்போது அதற்கு மதிப்புக் கொடுத்தான் ஆகவேண்டும். இதுதான் நீதியும்கூட. 

எழுதுபவை எல்லாம் சமூகம் பயன்படுத்திக் கொள்ளத்தான். அதைத்தான் எங்கள் முன்னோர் செய்திருக்கிறார்கள். இன்னும் மற்றவர்களும் செய்கிறார்கள். ஆனால் முன்னரே எழுதியவற்றை முறையாக எடுத்தாளுபவர்களைப் பற்றி யாரும் குறைசொல்லப்போவதில்லை. 

ஒருவர் எழுதிய கட்டுரையின் தொடரை அல்லது பகுதியை உரிய மேற்கோளுடன் பயன்படுத்தவேண்டும்.  இதுதான் இலக்கிய தர்மமும்கூட. (முழுமையாகவே களவெடுத்து பெயர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள்) ஆனால் எங்கள் திருட்டு ஜாம்பவான்கள் மிக இலகுவாக குழந்தையின் கையில் இருந்து காகம் வடையைத் தட்டிப் பறிப்பதுபோல தட்டிப்பறித்துச் செல்கிறார்கள்.

சரி எழுதினவர் பெயரைப் போடத் துணிச்சல் இல்லாவிட்டாலும்  எங்கே இருந்து இந்தப் பகுதியை எடுத்தாய் என்றாவது போடலாம் அல்லவா? 

அவரவர் தண்டனை கொடுப்பதற்கு - கசையடி கொடுக்கிறார்கள், சிறையில் தள்ளுகிறார்கள், தண்டப்பணம் வாங்குகிறார்கள்,  தலையை வெட்டுகிறார்கள், கொடும்பாவி எரிக்கிறார்கள்,  கோஷம் போடுகிறார்கள்.

இலக்கியத் திருடர்களுக்கு நாங்கள் என்னதான் தண்டனை கொடுப்பதாம்?