செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள்





ஒரு சில நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. தீபச்செல்வனிடம் ஒரு விடயம் சம்பந்தமாகப் பேசினேன். ஏதும் சொன்னாரா? என்றார். விசாரித்தபோது தனது உறவினர்குடும்பம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் போரில் பாதிக்கப்பட்ட பிள்ளை ஒன்றுக்கு படிப்புக்காக தொடர் உதவி செய்வதாகவும் அவர்கள் சில நாட்களில் புறப்பட இருப்பதால் தொடர்பினை ஏற்படுத்தித் தருமாறும் கேட்டுக் கொண்டார்.

தீபச்செல்வனின் 'தமிழ்ச்செல்வியின் யாருமற்ற நிலம்' என்றொரு கவிதை வந்தது எல்லோரும் அறிவர். அந்தச் சிறுமிக்கு உதவுவதற்காகவே தீபச்செல்வன் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார்.


கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சை எடுக்கவிருக்கும் மாணவியே தமிழ்ச்செல்வி என்பதும், அவளின் தாய் தந்தை சகோதரன் ஆகியோர் போரில் உயிரிழந்து விட்ட நிலையில் இன்னொரு இயங்கமுடியாத சகோதரனுடன் கூட தனது பெரிய தாயுடன் வாழ்கிறாள் என்பது அறிய முடிந்தது.

அதன்பின்னர் தொடர்பு கொண்டாயிற்று.

அதிபர் அலுவலகத்தில் உரையாடுதல்

அவளுக்கு உதவ முன்வந்தவர்கள் லண்டனில் இருந்து வந்திருந்த மயூரன் சுஜா தம்பதியினர். கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலய அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசகம் ஊடாக குறிப்பிட்ட சிறுமியைச் சந்தித்தனர். அதிபர் அவர்களுடன் உரையாடிய அந்தத் தம்பதியினரின் மனநிலையையும் மனநிறைவோடு உதவ வந்திருந்த ஆர்வத்தையும் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.

தமிழ்ச்செல்வின் தொடர்கல்வி சார்ந்த செலவுகளுக்கு ஒரு தொகைப் பணம் பாடசாலை அதிபர் ஊடாக சேர்வதற்கு ஒர் ஒழுங்கு செய்யப்பட்டது.

அடுத்து இன்னுமொரு சந்தோசம்.

இன்னொரு குழந்தைக்கு உதவுவது தொடர்பான ஏற்பாட்டின் பின்னர்
(மயூரன் சுஜா குடும்பத்தினருடன் அதிபர், திருதிருமதி குப்பிளான் சண்முகன் ஆகியோருடன்)

தற்போது இன்னுமொரு சிறிய வயதில் உள்ள எந்த உறவுமில்லாத இன்னொரு பிள்ளைக்கும் தொடர்ச்சியாக அவளின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை தாம் பொறுப்பேற்கவும் முன்வந்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தம்மால் முடிந்தவரை உதவ முடிவும் செய்துள்ளனர்.
இலக்கிய உறவாலும் நட்பாலும் இப்படியெல்லாம் சாதிக்க முடியுமாயின் ஏனையவர்களால் ஏன் முடியாது என்ற ஒரு கேள்வியும் என்னுள் முட்டிக் கொண்டிருந்தது. ஆகக்குறைந்தது எங்கள் பிள்ளைகள், எங்கள் சமூகம் என்று கத்திக் கொண்டிருப்பவர்கள் எந்தவழியிலாவது உதவுவதற்கு முதற்படியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

ஆகக்குறைத்தது ஒரு படைப்பினூடாகச் சுட்டிக் காட்டுதவனூடாக என்றாலும்.

ஒன்று மட்டும் புரிகிறது. தமிழ்ச்செல்விபோல இன்னும் நிரம்ப குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒரு மயூரன் சுஜா போல இன்னும் நிரம்ப மனிதர்களும் இருக்கிறார்கள். யார் முதலில் வாய்திறக்கிறார்கள் என்பதில்தான் பிரச்சினை.

பதிவு- சு.குணேஸ்வரன்(துவாரகன்)


ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

ஆயிஷா நூல் அறிமுகம்


-சு. குணேஸ்வரன்

தமிழ்நாட்டு எழுத்தாளர் இரா நடராசனின் ஆயிஷா என்றொரு குறுநாவல் இலக்கிய உலகில் அண்மைக்காலங்களில் பேசப்பட்ட ஒரு படைப்பு. 1997 ஆம் ஆண்டு கணையாழியில் வெளிவந்த இந்தக் கதையை ஈழத்தில் அறிவமுது பதிப்பகத்தினர் மறுவெளியீடாகக் கொண்டு வந்திருந்தனர். அந்நூல் பற்றிய சில குறிப்புகள் ...

ஆக்க இலக்கியப் படைப்புக்களிலே விஞ்ஞானக் கதைகளை மையமாக வைத்து கதை கூறும் பாணி குறைவு. என்றாலும்; மிகக்குறுகிய 32 பக்கங்களிலே ஆழமான கருத்தை இந்தக் குறுநாவல் உணர்த்துகின்றது.

எதற்கும் துருவித்துருவிக் கேள்வி கேட்டு தமது ஐயத்தை தெளிவுபடுத்த விரும்பும் மாணவர்களை அடித்து இருத்தி ஆசிரியர் தான் சொல்வதையே எழுதுமாறு திணிக்கும் மனோபாவம் எமது கல்விமுறையில் இருந்து முற்றாக அற்றுப்போய் விட்டது எனக் கூறமுடியாது.

இன்றைய தனியார் கல்விக்கூடங்களில் இருந்து பாடசாலை, மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் வரை மாணவர்களின் சொந்தக் கருத்துக்களையோ, தேடல்களையோ, வரையறுத்து தேய்ந்துபோன ஒலித்தட்டுப்போல் ஆசிரியர் கூறுவதையே மீண்டும் மீண்டும் கேட்கும் நிலைக்கு மாணவர்கள் உள்ளனர். இந்த நிலையில் மாணவர்களிடம் இருந்து சீரிய சிந்தனைகளோ,அல்லது ஆயிஷா கேட்பதுபோல்;

“……கரோலின் ஏர்ஷர் போலவோ மேரி கியூரி போலவோ பெயர் சொல்லுகிற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்? ”

என்று கேட்கத் தூண்டுகிறது. இதற்கு ஒரு வகையில் இந்தக் கல்விமுறையினையும், அதற்குள் ஊறிப்போய் இன்னமும் தம்மை மாற்றிக் கொள்ளாத ஆசிரியர்களையும் இரா. நடராசன் குற்றம் சாட்டுகிறார்.

ஓர் ஆக்க இலக்கியத்திற்குரிய அத்தனை பண்புகளையும் இந்தக் குறுநாவல் கொண்டிராவிட்டாலும் ஆயிஷா முன்வைக்கும் கருத்து மிக முக்கியமானது. எமது சமூக வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். குறிப்பாக ஆசிரியர்களும் எழுத்தாளர்களும்!

நூலாசிரியர் : இரா. நடராசன்
நூல் வெளியீடு : பாரதி புத்தகாலய்ம்
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை -600 018


-புதிய நூலகம் - செய்திமடல், 15.07.2011